Published : 02 Nov 2017 05:48 PM
Last Updated : 02 Nov 2017 05:48 PM
ரே பரேலி மாவட்டத்தில் ஏற்பட்ட அனல் மின் நிலைய பாய்லர் வெடிப்புச் சம்பவத்தில் 26 பேரின் இறப்புக்குக் காரணமான 6-வது யூனிட் மூடப்பட்டுள்ளது.
உ.பி.யின் ரே பரேலி மாவட்டம் உன்ச்சகார் என்ற இடத்தில் என்டிபிசி-க்கு சொந்தமாக 500 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல்மின் நிலையம் உள்ளது. இதன் 6-வது யூனிட் பகுதியில் உள்ள பாய்லர் நேற்று மாலை (புதன்கிழமை) திடீரென வெடித்துச் சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் சுமார் 100 பேர் காயம் அடைந்தனர்.
தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இதையடுத்து என்டிபிசி ஒப்பந்த தொழிலாளர்கள் நிறுவனத்துக்கு எதிராக வியாழக்கிழமை அன்று கோஷமிட்டனர். 6-வது யூனிட்டில் வெப்பநிலை அதிகரித்துவருவதாகத் தாங்கள் எச்சரித்ததாகவும் அதை என்டிபிசி கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் என்டிபிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஃபெரோஸ் காந்தி உன்ச்சகார் அனல் மின் நிலையத்தின் 6-வது யூனிட் மூடப்படுகிறது. இந்த முன்னெடுப்பு நவ.1, 2017-ல் நடந்த விபத்தால் நடைபெற்றுள்ளது. அனல் மின் நிலையத்தின் மற்ற 5 யூனிட்டுகளும் வழக்கம் போல் இயங்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள என்டிபிசி, அதிகப்படியான சாம்பல் படிந்ததே விபத்துக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உத்தரப் பிரதேச அரசு விரிவான நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT