Published : 07 Nov 2017 10:43 AM
Last Updated : 07 Nov 2017 10:43 AM

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்: காஷ்மீரில் செனாப் ஆற்றில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஜம்மு காஷ்மீரின் செனாப் ஆற்றின் குறுக்கே உலகின் மிகவும் உயரமான ரயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இந்திய ரயில்வே சார்பில், ரியாசி மாவட்டத்தில் ஓடும் செனாப் ஆற்றின் மேல் 359 மீட்டர் உயரத்தில் புதிதாக ஒரு பாலம் கட்டப்படுகிறது. இது உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும், பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தைவிட 30 மீட்டர் அதிக உயரம் கொண்டதாக இருக்கும்.

இதுகுறித்து ரயில்வே வாரிய உறுப்பினர் (பொறியியல்) எம்.கே.குப்தா கவுரி நகரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஷ்மீர் ரயில்வே திட்டத்தின் (உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா) ஒரு பகுதியாக பிரம்மாண்டமான ஒரு பாலம் கட்டப்படுகிறது. இந்தத் திட்டத்தின் பல்வேறு நிலைகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பாலத்தின் இரு பகுதிகளுக்கு நடுவே பிரதான வளைவை பொருத்தும் பணி தொடங்கி உள்ளது. அதேநேரம் இரு பக்கங்களிலும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். சுமார் 111 கி.மீ. தொலைவு கொண்ட கத்ரா மற்றும் பனிஹால் பகுதியை இந்தப் பாலம் இணைக்கும்.

1.3 கி.மீ. நீளம் கொண்ட இந்தப் பாலம் ரூ.1,250 கோடி செலவில் ஆப்கான்ஸ் நிறுவனத்தால் கட்டப்பட்டு வருகிறது. இதன் முழு கட்டுமானப் பணியும் 2019-ம் ஆண்டு மே மாதம் முடிவடையும். ரிக்டர் அளவுகோளில் 8 புள்ளிகள் வரையிலான நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மணிக்கு 90 கி.மீ. வரை காற்றின் வேகம் இருக்கும் வரை இந்தப் பாலத்தின் மீது ரயில் ஓடும். அதைத் தாண்டினால் தானியங்கி சமிக்ஞை முறையில் போக்குவரத்து தானாகவே நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x