Last Updated : 19 Jul, 2014 09:51 AM

 

Published : 19 Jul 2014 09:51 AM
Last Updated : 19 Jul 2014 09:51 AM

காவிரியில் தமிழகத்துக்கு 39,300 கன அடி நீர் திறப்பு: கர்நாடக விவசாயிகள் போராட்டம்

கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி ஆகிய அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் தமிழகத்துக்கு வெள்ளிக்கிழமை வினாடிக்கு 39,300 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருதால், கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி ஆகிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 94.85 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 28,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் அங்கிருந்து வினாடிக்கு 10,800 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கேரளத்தின் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக, கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரமுள்ள கபினி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வெள்ளிக் கிழமை மாலை நிலவரப்படி இந்த அணையின் நீர்மட்டம் 2281.65 அடியாக உயர்ந்து, நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் அணையின் பாது காப்பு கருதி அணைக்கு வரும் நீர் (வினாடிக்கு 24,000 கன அடி) வெளியேற்றப்படு கிறது.

இதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,859 அடி உயரத்தில் உள்ள ஹாரங்கியின் நீர்மட்டம் 2856.61 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 9,191 கன அடி நீர் வரும் நிலையில், வினாடிக்கு 4,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

விவசாயிகள் போராட்டம்

காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறந்து விடப்பட்டதற்கு கர்நாடக விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாநிலம் தழுவிய போராட்ட எச்சரிக்கையும் விடுத்துள்ளன.

இந்நிலையில் மைசூர், மண்டியாவில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x