Published : 24 Nov 2017 05:10 PM
Last Updated : 24 Nov 2017 05:10 PM

குஜராத் 5 - 10 தொழிலதிபர்களுக்கு சொந்தமானதா? - தேர்தல் பிரசாரத்தில் ராகுல் கேள்வி

குஜராத்தில் 5 முதல் 10 தொழிலதிபர்களுக்காக மட்டுமே பாஜக அரசு பணம் செலவு செய்து திட்டங்களை செயல்படுத்தியதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒரு மாதம் உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் பாஜகவுக்கும், எதிர்கட்சியான காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சியினர் புதிய உற்சாகத்துடன் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் பல்வேறு தொகுதிகளில் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் செய்தார். போர்பந்தர் நகரில் நடந்த கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:

‘‘குஜராத் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக, 5ல் இருந்து 10 தொழிலதிபர்களுக்காகவே அனைத்து பணிகளும் நடக்கின்றன. எனவே தான் அவர்கள் பாஜகவின் பிரசாரத்திற்கு செலவு செய்கின்றனர். குஜராத் மாநிலம் சில தொழிலதிபர்களுக்கு சொந்தமானது அல்ல. விவசாயிகள், தொழிலாளர்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் சொந்தமானது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தொழிலதிபர்களுக்காக தான் திட்டங்களை செயல்படுத்துகிறது.

ஆனால் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை காங்கிரஸ் அரசு செயல்படுத்தியது. டாடா நிறுவனத்தின் நானோ திட்டத்திற்காக நிலம் வழங்கிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடும் கிடைக்க வில்லை.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை கறுப்பு பணத்தை வெள்ளையாக்கவே நடந்துள்ளது. இதனால் குஜராத் மட்டுமின்றி நாடுமுழுவதும் சிறு வணிகர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x