உத்தரப் பிரதேச அனல் மின் நிலைய பாய்லர் விபத்து: பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு

உத்தரப் பிரதேச அனல் மின் நிலைய பாய்லர் விபத்து: பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தின் ரே பரேலி மாவட்டத்தில் அனல் மின் நிலைய பாய்லர் வெடிப்புச் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்தது.

 உ.பி.யின் ரேபரேலி மாவட்டம் உன்ச்சகார் என்ற இடத்தில் என்டிபிசி-க்கு சொந்தமாக 500 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல்மின் நிலையம் உள்ளது. இதன் 6-வது யூனிட் பகுதியில் உள்ள பாய்லர் நேற்று மாலை (புதன்கிழமை) திடீரென வெடித்து சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் சுமார் 100 பேர் காயம் அடைந்தனர்.

பலர் படுகாயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்க, மொரீஷியஸ் சென்றுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in