Last Updated : 19 Nov, 2017 08:52 AM

 

Published : 19 Nov 2017 08:52 AM
Last Updated : 19 Nov 2017 08:52 AM

போயஸ் கார்டன் சோதனை தொடர்பாக சசிகலாவிடம் விரைவில் விசாரணை: வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டம்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் நடந்த சோதனை தொடர்பாக பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த வாரம் வருமான வரி அதிகாரிகள் 5 நாட்கள் சோதனை நடத்தினர். இந்நிலையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நேற்று முன்தினம் இரவு திடீரென சோதனை நடத்தினர். இது தொடர்பாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

இது தொடர்பாக வருமான வரித்துறையில் விசாரித்த போது, “எங்களின் சோதனையில் சசிகலாவுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக விவேக், கிருஷ்ண ப்ரியா, ஷகிலா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளன. இதில் சில ஆவணங்கள், தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளன. எனவே விடுபட்ட முக்கிய ஆவணங்கள் ஜெயலலிதாவின் வீட்டில் தேடப்பட்டன. இந்த சோதனை தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி தலைமை அதிகாரிகள் ஒப்புதல் அளித்தால் பெங்களூரு நீதிமன்றத்தை அணுகி, சசிகலாவிடம் விசாரிக்க அனுமதி பெறப்படும்” என்று தெரிவித்தனர்.

இது குறித்து பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் குமாரிடம் கேட்டபோது, ''சசிகலாவை விசாரிப்பது தொடர்பாக எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. நீதிமன்ற உத்தரவுடன் அணுகினால் விசாரணைக்கு அனுப்புவோம். ஏற்கெனவே கர்நாடக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வருமான வரி சோதனை தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x