

தொண்டு நிறுவனங்கள் முறையாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்கின்றனவா என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சிபிஐ-க்கு உச்சநீதிமன்றம் மூன்று மாதம் அவகாசம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்துபணம் பெற்று அரசின் திட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துகின்றன என்று மத்திய உளவுத்துறை அறிக்கை அளித்ததன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொண்டு நிறுவனங்கள் முறையாக வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்கின்றனவா என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று சிபிஐ-க்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்த கால அவகாசத்தை தற்போது மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.