Published : 12 Nov 2017 09:51 AM
Last Updated : 12 Nov 2017 09:51 AM

குஜராத்தில் படேல் இனத்தவரை கவர அக்ஷர்தாம் கோயிலில் வழிபட்டு பிரச்சாரத்தைத் தொடங்கினார் ராகுல்

வடக்கு குஜராத்தில் படேல் இனத்தவர்கள் வழிபடும் அக் ஷர்தாம் கோயிலில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வழிபாடு நடத்தி தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக ஆளும் பாஜக.வும், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், வடக்கு குஜராத்தில் 6 மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப் பயணம் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று காந்திநகர் வந்தார்.

பின்னர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அக்ஷர்தாம் கோயிலில் ராகுல் காந்தி வழிபாடு நடத்தினார். பின்னர் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்ய சென்றார்.

அக்ஷர் தாம் கோயில் சுவாமிநாராயணன் பிரிவைச் சேர்ந்தது. படேல் இனத்தவர்கள் பின்பற்றி வரும் கோயில். எனவே, படேல் இனத்தவரின் ஆதரவைப் பெறுவதற்காக அக்ஷர்தாம் கோயிலில் ராகுல் வழிபாடு நடத்தியுள்ளார். தேர்தல் நேரத்தில் மட்டும் அவர் இந்துக்களின் கோயில்களுக்கு செல்வார் என்று பாஜக குற்றம் சாட்டியது.

அதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சக்திசிங் கோஹில் கூறும்போது, ‘‘ராகுல் இதற்கு முன்னர் ஜெயின் கோயில், குருத்வாராக்களுக்கு சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சி மதச்சார்பின்மையை கடைபிடிக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜக.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்’’ என்று தெரிவித்தார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x