Published : 02 Nov 2017 09:08 AM
Last Updated : 02 Nov 2017 09:08 AM

மேற்கு வங்கத்துக்கு முதலீடுகளை கவர மும்பையில் முகேஷ் அம்பானியுடன் முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு: உத்தவ் தாக்கரேவை சந்திக்க திட்டம்

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியை, அவரது இல்லத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்தார். அப்போது மேற்குவங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சர்வதேச வர்த்தக மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது மாநிலத்துக்கு முதலீடுகளை அதிகரிக்க கடந்த செவ்வாய்க்கிழமை மும்பைக்கு வந்தார். இங்கு 4 நாட்கள் தங்கும் மம்தா பானர்ஜி, செவ்வாய்க்கிழமை மாலை ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியை அவரது பிரம்மாண்ட மாளிகையான ‘அன்டிலியா’வில் சந்தித்தார்.

அப்போது, அடுத்த ஆண்டு மேற்குவங்கத்தில் நடைபெற உள்ள பெங்கால் சர்வதேச வர்த்தக மாநாட்டில் பங்கேற்குமாறு முகேஷ் அம்பானிக்கு மம்தா அழைப்பு விடுத்தார் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூறினர். மேலும், அம்பானி வீட்டில் மம்தா இரவு உணவருந்தினார்.

முன்னதாக தாஜ்மஹால் பேலஸில் பல்வேறு தொழிலதிபர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தவிர நேற்று புதன்கிழமை தொழிலதிபர்கள் பலரை சந்தித்து மேற்குவங்கத்தில் முதலீடுகள் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார். இன்று பல்வேறு தொழிலதிபர்களை மம்தா சந்திக்க உள்ளார்.

மேலும், பிரதமர் மோடியையும், பாஜக ஆட்சியையும் விமர்சித்து வரும் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவையும் மம்தா சந்திக்க உள்ளார். 4 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு 3-ம் தேதி மம்தா கொல்கத்தா திரும்புகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x