Published : 14 Nov 2017 10:05 AM
Last Updated : 14 Nov 2017 10:05 AM

நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெற்ற வழக்கில் விசாரணை கமிஷன் பற்றி உச்ச நீதிமன்றம் இன்று முடிவு

நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெறப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை கமிஷன் அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

ஒடிஷாவில் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பான வழக்கில் சாதகமான தீர்ப்பை பெற நீதிபதிகள் பெயரில் இடைத்தரகர் ஒருவர் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒடிஷா உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் சில குறிப்பிட்ட நீதிபதிகளின் பெயரில் லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சிபிஐ விசாரித்து ஒடிஷா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி இஸ்ரத் மஸ்டூர் குட்டூசி, இடைத்தரகர் விஸ்வநாத் அகர்வாலா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் நீதி விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிடக் கோரி சிஜேஏஆர் தொண்டு நிறுவனம், வழக்கறிஞர் காமினி ஜெய்ஷ்வால் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இதில் காமினி ஜெய்ஷ்வால் மனுவை விசாரித்த நீதிபதி செலமேஸ்வரர் அமர்வு, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்த பரிந்துரை செய்தது. இந்த உத்தரவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு ரத்து செய்தது.

இந்நிலையில் காமினி ஜெய்ஷ்வால், சிஜேஏஆர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், அருண் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இந்த மனுக்கள் குறித்து செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x