Published : 04 Nov 2017 10:20 AM
Last Updated : 04 Nov 2017 10:20 AM

நடிகை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: கைதான மலையாள நடிகர் திலீப் வலியுறுத்தல்

கேரளாவில் நடிகை கடத்தப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்துறை செயலாளருக்கு பிரபல நடிகர் திலீப் கடிதம் எழுதி உள்ளார்.

கேரளாவில் பிரபல நடிகை படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் செல்லும் போது கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக பல்சர் சுனி மற்றும் அவரது கூட்டாளிகளை ஒரு வாரத்தில் போலீஸார் கைது செய்தனர்.

இந்தக் கடத்தலில் பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த ஜூலை 10-ம் தேதி திலீப்பை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின்னர் அவர் ஜாமீன் கேட்டு 4 முறை விண்ணப்பித்தார். அவை நிராகரிக்கப்பட்டன. அதன்பின்னர் 5-வது முறை ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தார். அதை ஏற்றுக்கொண்ட கேரள உயர் நீதிமன்றம், திலீப்புக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

ஜாமீனில் வெளியில் வந்த திலீப் சபரிமலை ஐயப்பன் கோயில் உட்பட பல கோயில்களுக்கு சென்று வருகிறார். இதற்கிடையில் கடத்தல் வழக்கில் இறுதி குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்ய உள்ளனர். இந்நிலையில், வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி 12 பக்க கடிதத்தை கேரள மாநில உள்துறை செயலாளருக்கு திலீப் நேற்று அனுப்பி உள்ளார்.

அதில், ‘‘கேரள கூடுதல் டிஜிபி பி.சந்தியா தலைமையிலான அதிகாரிகள் என்னை மிரட்டினர். பேரம் பேசினார். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்’’ என்று குற்றம் சாட்டி உள்ளார். - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x