மகாராஷ்டிராவில் நடந்த திலகர் விருது விழா மேடையில் பிரதமர் மோடியுடன் பங்கேற்ற சரத் பவார்

மகாராஷ்டிராவில் நடந்த திலகர் விருது விழா மேடையில் பிரதமர் மோடியுடன் பங்கேற்ற சரத் பவார்
Updated on
1 min read

புனே: மகாராஷ்டிராவில் நடந்த திலகர் விருது வழங்கும் விழா மேடையில் பிரதமர் மோடியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவாரும் ஒன்றாக பங்கேற்றுள்ளனர்.

சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய லோக்மான்ய திலகர் பெயரில் விருது ஒன்றை திலக் சாமர்க் மந்திர் அறக்கட்டளை கடந்த 1983-ம் ஆண்டு உருவாக்கியது. இந்த விருது, நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட தலைவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் லோக்மான்ய திலகரின் நினைவு தினமான ஆகஸ்ட் 1-ம் தேதி வழங்கப்படுகிறது.

இந்தாண்டுக்கான விருது மகாராஷ்டிராவின் புனே நகரில் நேற்று நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பெறும் 41-வது தலைவர் பிரதமர் மோடி ஆவார். இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

லோக்மான்ய திலகர், இந்திய சுதந்திர போராட்டத்தின் திலகமாக திகழ்ந்தார். சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என கூறிய திலகர், சுதந்திர போராட்டத்தின் திசையை மாற்றினார். இதனால் இவர் புரட்சிகர இந்தியாவின் தந்தை என அழைக்கப்பட்டார். இவரை நவீன இந்தியாவின் சிற்பி என மகாத்மா காந்தியும் அழைத்தார். இந்திய சுதந்திர போராட்டத்தில், லாலா லஜபதி ராய் மற்றும் பிபின் சந்திர பால் ஆகியோருடன் திலகர் இணைந்து செயல்பட்டது, சுதந்திர பேராட்டத்தின் பொற்காலம்.

இவரது பெயரிலான விருதை பெறுவதை நான் பெருமையாக கருதுகிறேன். இதன் மூலம் எனது பொறுப்புகளும் அதிகரிக்கிறது. இளைஞர்களிடம் உள்ள திறமை அறியும் திறனை பெற்றவர் லோக் மான்ய திலக். வீர சாவர்க்கரின் திறமையை அறிந்த லோக்மான்ய திலகர், வீர சாவர்க்கர் வெளிநாட்டில் படிக்க தூண்டுகோலாக விளங்கினார். திலகர் பெயரில் பெற்ற விருதை நாட்டின் 140 கோடி மக்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். இந்த விருதுடன் வழங்கப்பட்ட பரிசு தொகையை தூய்மை கங்கை திட்டத்துக்கு வழங்குகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

சரத் பவாரின் நெருங்கிய உறவினரான அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகி தனது ஆதரவாளர்களுடன் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசில் இணைந்தார். அவருக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இது, சரத் பவாருக்கு பெரிய மனக்கசப்பை உண்டாக்கியது.

இந்த நிலையில், பிரதமருக்கு விருது வழங்கும் விழாவை புறக்கணிக்குமாறு சரத் பவாரை சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வற்புறுத்தின. இருந்தபோதும், அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் சரத் பவார் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்று ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

விழா மேடையில் பிரதமரே சரத் பவாரை தேடிச்சென்று கைகுலுக்கி நலம் விசாரித்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பாட்னா, பெங்களூருக்குப் பிறகு இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் மூன்றாவது முறையாக மும்பையில் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ள நிலையில் சரத் பவாரின் இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in