Published : 14 Nov 2017 10:05 AM
Last Updated : 14 Nov 2017 10:05 AM
ரயில்வே ஹோட்டல் ஊழல் வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை முன் தேஜஸ்வி யாதவ் நேற்று ஆஜரானார்.
ராஷ்ட்ரிய ஜனதா தலைவர் லாலுவின் மகனும் பிஹாரின் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி நேற்று காலை 11 மணிக்கு பிறகு, விசாரணை அதிகாரி முன் ஆஜரானார். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை முன் தேஜஸ்வி ஆஜராவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் கடந்த அக்டோபர் 10-ம் தேதி தேஜஸ்வி ஆஜரானார். அவரிடம் 9 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன்பிறகு 4 முறை விசாரணையை தவிர்த்த தேஜஸ்வி, புதிய அழைப்பாணையின் அடிப்படையில் நேற்று ஆஜரானார்.
லாலு, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் தேஜஸ்வியின் தாயாரும் பிஹார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி இதுவரை 6 முறை விசாரணையை தவிர்த்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் லாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த சிபிஐ பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. லாலு ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்துக்கு (ஐஆர்சிடிசி) சொந்தமான 4 ஹோட்டல்களைப் பராமரிக்கும் பொறுப்பு ‘சுஜாதா ஹோட்டல்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு பிரதிபலனாக பினாமி நிறுவனம் மூலம் லாலு குடும்பத்தினர் பாட்னாவின் முக்கிய இடத்தில் 3 ஏக்கர் நிலம் பெற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT