பென்னாகரம், அரூரில் சுற்றுலா தலங்கள் அமைக்க வேண்டும்: மக்களவையில் திமுக எம்பி செந்தில்குமார் கோரிக்கை

பென்னாகரம், அரூரில் சுற்றுலா தலங்கள் அமைக்க வேண்டும்: மக்களவையில் திமுக எம்பி செந்தில்குமார் கோரிக்கை

Published on

புதுடெல்லி: பென்னாகரம், அரூரில் சுற்றுலா தலங்கள் அமைக்க இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுந்தது. தருமபுரி மக்களவை தொகுதியான எம்பி செந்தில்குமார் இந்த கோரிக்கையை விடுத்தார்.

இதுகுறித்து திமுக எம்பியான செந்தில்குமார் சட்ட விதி 377 -ன் கீழ் பேசியதாவது: தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பென்னாகரம் தாலுக்காவின் நாகமரை, அருர் தாலுகாவின் சிட்லிங் ஆகிய பகுதிகளில் சுற்றுலா தலங்கள் அமைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

அதுபோல் பொழுதுபோக்கு சுற்றுலாவுக்கும் அங்கு வாய்ப்பு உள்ளது. இதே பகுதிகளில் சாகச சுற்றுலாவுக்கும் சாத்திய கூறுகள் உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் நாகமாரை மற்றும் சிட்லிங் பகுதியில் சுற்றுலா மையம் அமைக்க தேவையான அனைத்து வசதிகளும் இயற்கை வளத்துடன் அமைந்துள்ளன.

குறிப்பாக மேட்டூர் வட்டத்துக்கு உட்பட்ட நாகமரையில் உப்பங்கழி அமைந்துள்ளது. ஆனால் அங்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், சுற்றுலாத் தலமாக மேம்படுத்தவும், சிறப்பு நிதியை ஒதுக்கி சிட்டிலிங் மற்றும் நாகமரையை சுற்றுலா த்தலமாக மாற்ற மத்திய சுற்றுலா அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in