Published : 09 Nov 2017 12:11 PM
Last Updated : 09 Nov 2017 12:11 PM

ரயான் பள்ளி 7 வயது சிறுவன் கொலை வழக்கு: கைதான மாணவனிடம் சிபிஐ விசாரணை

ஹரியாணா மாநிலம் குருகிராமில் 7 வயது சிறுவன் பள்ளியில் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 11-ம் வகுப்பு மாணவரை   மூன்று நாட்கள் காவலில் எடுத்துள்ள சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.

குருகிராமில் உள்ள ரயான் சர்வதேச பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த பிரதியூமன் (7) என்ற மாணவன் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி பள்ளிக் கழிப்பறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தான்.

இது தொடர்பாக பள்ளிப் பேருந்து நடத்துநர் அசோக்குமார் மற்றும் பள்ளியின் 2 அதிகாரிகளை போலீஸார் கைது செய்தனர். சிறுவனை அசோக்குமார் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சிறுவனை அவர் கொன்றதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பெற்றோர்களின் தொடர் போராட்டம் காரணமாக, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் பரிந்துரை செய்தார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 22-ம் தேதி வழக்கு விசாரணையை சிபிஐ ஏற்றுக்கொண்டது.

இந்த நிலையில் சிபிஐ நடத்திய விசாரணையில், தேர்வு மற்றும் பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்தை தள்ளி வைப்பதற்காக அதே பள்ளியில் படித்த 11- வகுப்பு சீனியர் மாணவரே சிறுவனை கொலை செய்ததாக புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அந்த சீனியர் மாணவரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x