Published : 24 Jul 2023 07:52 AM
Last Updated : 24 Jul 2023 07:52 AM

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போராட்டங்களின் தலைநகராக மணிப்பூர் இருந்தது: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கருத்து

ஹிமந்த பிஸ்வா சர்மா

புதுடெல்லி: மணிப்பூர் வன்முறை சம்பவத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசை, காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

மணிப்பூர் விஷயத்தில் காங்கிரஸ் திடீரென ஆர்வம் காட்டியுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்திலும், மணிப்பூரில் இதேபோன்ற பிரச்சினைகள் நிலவியதை நினைத்து பார்க்க வேண்டியது முக்கியம். ஐ.மு.கூட்டணி ஆட்சி காலத்தில், போராட்டங்களின் தலைநகராக மணிப்பூர் இருந்தது. கடந்த2010-ம் ஆண்டு முதல் 2017-ம்ஆண்டு வரை மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் 30 நாட்கள் முதல் 139நாட்கள் வரை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

கடந்த 2011-ம் ஆண்டில் 120 நாட்கள் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.240 முதல் ரூ.2,000 வரை உயர்ந்தது. மருத்துவமனைகளில் மருந்துக்கும், ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு நிலவியது.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த வன்முறையில் பொது மக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் 991 பேர் உயிரிழந்தனர். அப்போது மன்மோகன் சிங், ஐ.மு.கூட்டணி தலைவராக இருந்த சோனியா ஆகியோர், மணிப்பூர் சம்பவங்கள் குறித்து ஒரு வார்த்தை கூட கூறியதில்லை. மணிப்பூரில் நடந்த கொடூர சம்பவத்தை கண்டிக்கிறேன். இதை ஒரு தனி சம்பவமாக கருத வேண்டும். இவ்வாறு சர்மா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x