Last Updated : 15 Nov, 2017 12:21 PM

 

Published : 15 Nov 2017 12:21 PM
Last Updated : 15 Nov 2017 12:21 PM

ராகுல் பற்றி பப்பு விமர்சனம்: குஜராத் பாஜக பிரச்சாரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை

குஜராத் தேர்தலை முன்னிட்டு ஆளும் பாஜகவினர் தங்களின் மின்னணு பிரச்சாரங்களில் 'பப்பு' என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியைக் குறிவைத்துக் கூறப்படும் 'பப்பு' என்ற வார்த்தை, 'தரக்குறைவானது' என்றும் தேர்தல் ஆணையம் விமர்சித்துள்ளது.

சமூக வலைதளங்களில் ராகுல் காந்தியைக் குறிப்பிடப் பயன்படுத்தும் வார்த்தை 'பப்பு'.

இதுகுறித்து குஜராத் பாஜக வட்டாரத்தில் விசாரித்தபோது, ''தேர்தல் சம்பந்தமான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு முன்பு தேர்தல் ஆணையக் குழுவிடம் அதனைக் காண்பித்து ஒப்புதல் பெறவேண்டும். அதே போல ஒரு மாதம் முன்பு பிரச்சாரக் குறிப்பேடு அவர்களிடம் காண்பிக்கப்பட்டது. அப்போது 'பப்பு' என்ற வார்த்தையை தேர்தல ஆணையம் ஆட்சேபித்தது. தரக்குறைவான வார்த்தை என்று கூறி, அதை நீக்குமாறு ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

இதையடுத்து பாஜக, இந்த முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கூறியது. ஆனால் அதற்கு தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

இதனால் அந்த வார்த்தையை நீக்கியோ அல்லது வேறு வார்த்தையைப் பயன்படுத்தியோ புதிய பிரச்சாரக் குறிப்பேட்டை பாஜக விரைவில் சமர்ப்பிக்கும்'' என்றனர்.

இதுதொடர்பாக குஜராத் தலைமை தேர்தல் அதிகாரி ஸ்வெயினைத் தொடர்பு கொண்டபோது, இவை குறித்த தகவல்கள் எதுவும் தனக்குத் தெரியவில்லை என்றும் அதுகுறித்து அறிந்தபிறகே கருத்து தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x