Published : 03 Nov 2017 09:31 AM
Last Updated : 03 Nov 2017 09:31 AM
உ.பி.யில் அனல் மின்சார நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை நேற்று 29 ஆக உயர்ந்தது.
உ.பி.யின் ரேபரேலி மாவட்டம் உன்ச்சகார் என்ற இடத்தில் தேசிய அனல்மின் கழகத்துக்கு (என்டிபிசி) சொந்தமாக மின் உற்பத்தி நிலையம் உள்ளது. 1,550 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின் நிலையத்தில் சுமார் 870 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இதன் 6-வது யூனிட் பகுதியில் உள்ள பாய்லர் நேற்று முன்தினம் வெடித்து சிதறியது. இதில்14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் சுமார் 100 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை நேற்று 29 ஆக உயர்ந்தது. விபத்துக்கான காரணங்கள் குறித்து என்டிபிசி விசாரணை தொடங்கியுள்ளது.
விபத்து குறித்து அறிந்தவுடன் மிகுந்த வேதனை அடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்க அவர் உத்தர விட்டுள்ளார்.
இதுதவிர, விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய எரிசக்தி்த் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.
ரேபரேலி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தொகுதியாகும். விபத்து குறித்து சோனியா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது குஜராத் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு ரேபரேலி விரைந்தார். நேற்று அவர், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
உ.பி. துணை முதல்வர் தினேஷ் சர்மா நேற்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார். மாநில நிர்வாகம் தரப்பில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT