Published : 23 Nov 2017 09:49 AM
Last Updated : 23 Nov 2017 09:49 AM
இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோன் நடித்த ‘பத்மாவதி’ இந்தி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதில் ராஜபுத்ர வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜக செய்தி தொடர்பாளர் சுராஜ்பால், தீபிகா படுகோனின் தலையை எடுப்பவர்களுக்கு ரூ.10 கோடி அளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
தீபிகா படுகோன் கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதால் அவரது வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, தீபிகா படுகோனுக்கு சொந்தமாக பெங்களூரு பென்சன் டவுன், ஜேசி நகர் மற்றும் மங்களூருவில் உள்ள வீடுகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த வீடுகளில் தீபிகா படுகோனின் தந்தை பிரகாஷ், தாய் உஜ்வாலா, சகோதரி அனிஷா மற்றும் உறவினர்கள் வசிக்கின்றனர்.
இதனிடையே, முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘கர்நாடகாவை சேர்ந்த தீபிகா படுகோனுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜகவின் வெறுப்பு கலாச்சாரத்தை கண்டிக்கிறேன். இந்த விவகாரத்தில் அவரை மிரட்டிய பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க ஹரியாணா முதல்வரிடம் பேசி இருக்கிறேன்''என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT