Published : 10 Nov 2017 01:13 PM
Last Updated : 10 Nov 2017 01:13 PM

குஜராத் தேர்தலுக்காக ஜிஎஸ்டியில் மாற்றம்: மத்திய அரசு மீது ப.சிதம்பரம் கடும் தாக்கு

ஜிஎஸ்டி வரி விவகாரத்தில் பிடிவாதமாக இருந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தற்போது வரி விகிதங்களை குறைக்க முன் வந்துள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 23வது கூட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறுகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் சிறு வர்த்தர்கள் பயன்பெறும் வகையில் ஜிஎஸ்டி வரி விகிதம் கணிசமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறியதாவது:

‘‘ஜிஎஸ்டி வரி விதிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை எதிர்கட்சிகள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன. ஜிஎஸ்டி வரியை மிக மோசமான முறையில் அமல்படுத்தி, மத்திய அரசு பல தரப்பினரையும் பாதிக்கச் செய்து விட்டது.

இதுபற்றி சுட்டிக்காட்டிய போதும் மத்திய அரசு பிடிவாதமாக இருந்தது. மக்கள் கோபம் அதிகரிப்பதாலும் எதிர்கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்து வருவதாலும், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாகவும் ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு முன் வந்துள்ளது.

நாட்டில் மிகப்பெரிய அளவில் வரி சீர்த்திருத்தம் செய்யும் வாய்ப்பு பறிபோய் இருக்கிறது, மோசமான குழுப்பத்திற்கு ஜிஎஸ்டி வரி காரணமாகியுள்ளது என காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் நிதியமைச்சர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர். ஜிஎஸ்டி மசோதா மாநிலங்களவையில் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்கள் மன்றத்திலும், ஜிஎஸ்டி கவுன்சிலிலும் விவாதிப்பதை மத்திய அரசால் தடுக்க முடியாது.

ஆக்ரா, சூரத், திருப்பர் என பல நகரங்களிலும் ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றம் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வர்த்தக்களையும், மக்களையும் அவதிக்குள்ளாக்குவதை விடுத்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு முன் வர வேண்டும்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x