Last Updated : 31 Jul, 2014 10:00 AM

 

Published : 31 Jul 2014 10:00 AM
Last Updated : 31 Jul 2014 10:00 AM

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சம்மனை எதிர்த்து சோனியா, ராகுல் மனு

காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் இருவரும் ஆகஸ்ட் 7-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

‘நேஷனல் ஹெரால்டு’ என்ற பத்திரிகையை முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு கடந்த 1938-ம் ஆண்டு தொடங்கினார். அந்த பத்திரிகை 2008-ம் ஆண்டு மூடப்பட்டது. அந்த பத்திரிகைக்கு சொந்தமான நிலம் மற்றும் சொத்துகளை ஒப்பந்த விதிகளை மீறி, முறைகேடாக குத்தகைக்கு விட்டதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

சோனியா, ராகுல் தொடர்புடைய, ‘யங் இண்டியா’ என்ற நிறுவனம் சார்பில், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை நடத்தி வந்த ‘அசோசியேடட் ஜர்னல்ஸ்’ நிறுவனம் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும், இந்த நில விவகாரத்தில் ரூ. 2000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும் சுப்ரமணியன் சுவாமி குற்றம் சாட்டி இருந்தார்.

இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஏற்ற டெல்லி பெருநகர குற்றவியில் நீதி மன்ற நீதிபதி கோமதி மனோச்சா, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி இருவரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தர விட்டார்.

முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆஸ்கர் பெர்னாண்டஸ், மோதி லால் வோரா மற்றும் சுமன் துபே, தேசிய அறிவுசார் ஆணையத்தின் முன்னாள் தலைவர் சாம் பிட்ரோடா ஆகியோரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.

சம்மன் அனுப்பப்பட்டுள்ளதை எதிர்த்து சோனியா, ராகுல் சார்பில் டெல்லி உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் சோனியா, ராகுல் சார்பில் வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகவுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x