

சென்னை: சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதையொட்டி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு மைல்கல் ஆகும். இந்த சாதனையை செய்ய அயராது உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்: சந்திரயான்-3 விண்கலத்தின் வரலாற்று சிறப்புமிக்க பயணத்துக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். இந்த சாதனை, விண்வெளி ஆராய்ச்சியில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவின் விண்வெளி பயணத்தில் மைல்கல்லாக அமைந்த இந்த நிகழ்வு ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ளச் செய்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி: நிலவில் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பதை சந்திரயான்-1 உறுதி செய்தது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. சந்திரயான்-2 விண்கலமும் மிகச்சிறந்த தரவுகளை அளித்தது. தற்போது சந்திரயான்-3 விண்கலப் பயணம், இந்தியாவின் விண்வெளி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறது. ஒவ்வொரு இந்தியரின் கனவுகளையும் லட்சியங்களையும் உயர்த்தி, உயரமாக உயர்கிறது. இந்த முக்கியமான சாதனை நமது விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்று. அவர்களது ஆற்றல்மற்றும் அறிவுக்கு தலைவணங்குகிறேன். இந்தியவிண்வெளி துறையை பொருத்தவரை 2023-ம் ஆண்டு ஜூலை14-ம் தேதி எப்போதும் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டு இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.