Published : 01 Apr 2014 04:42 PM
Last Updated : 01 Apr 2014 04:42 PM

காங்கிரஸ் 365 நாள்களும் முட்டாள்கள் தினத்தைக் கொண்டாடுகிறது: மோடி

தேர்தல் நேரத்தில், ஓட்டுக்காக ஏழை மக்களிடையே சென்று ஏழ்மைப் பாட்டு பாடுவதாக காங்கிரஸ் கட்சியை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கடுமையாக சாடினார்.

மேலும், காங்கிரஸ் 365 நாளும் முட்டாள்கள் தினத்தை கொண்டாடுகிறது என்பது மக்களுக்குத் தெரியும் என்று அவர் குறிப்பிட்டார்.

உத்திரப் பிரதேசம் மாநிலம் பரேலியில், குஜராத் முதல்வரும், பா.ஜ.க பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொண்டபோது பேசியது:

"பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதுபோல, காங்கிரஸ் தேர்தல் நேரத்தில் 'ஏழை', 'ஏழை', 'ஏழை' என்ற மந்திரத்தைப் பாடுகிறது. அனால், ஏழை மக்கள் உணர்ந்துவிட்டனர். காங்கிரஸ் 365 நாளும் முட்டாள்கள் தினத்தை கொண்டாடுகிறது என்று அவர்களுக்கு தெரியும்.

ராகுல் ஏழைகளின் மீது அக்கறை உள்ளது போல பாவனை செய்து வருவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். செல்வந்தராக பிறந்த ராகுலுக்கு ஏழை என்றால் தெரியுமா அல்லது வறுமை என்றால் புரியுமா?

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது நாட்டில் ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் புறக்கணிக்கப்பட்டனர். விவசாயிகள் தற்கொலைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். ஏழை மக்களுக்கு சென்றடைய வேண்டிய தானியங்களை கிடங்குகளில் அடைத்து வைத்து பாழாக்கச் செய்தது காங்கிரஸ் அரசு. உச்ச நீதிமன்றம் அந்த தானியங்களை ஏழைகளுக்கு விநியோகிக்கும்படி கேட்டப்போது காங்கிரஸ் அரசு அதனை செய்யவில்லை.

காங்கிரஸ் கட்சி 2009 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறியது. ஆனால், அவர்கள் அதனை செய்யவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது விவசாயிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது" என்றார் மோடி.

பிரச்சாரத்தின் இறுதியில் மக்களிடம் மன்னிப்புக் கோரிய மோடி, "நான் டெல்லி விமான நிலையத்திலிருந்து 9.30 மணிக்கு கிளம்ப முற்பட்டபோது எனது ஹெலிகாப்டர் பறக்க அதிகாரிகள் தடை விதித்தனர். அவர்கள் உங்களை நான் வந்து சந்திக்க கூடாது என்று சதி செய்கின்றனர். கடும் வெயிலில் உங்களை வாட வைத்ததற்கு மன்னிப்பு கோருகிறேன்" என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x