கேரளாவில் கனமழை காரணமாக கர்நாடக கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பெங்களூரு: கேரளாவில் கனமழை பெய்து வருவதால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கர்நாடகாவில் குடகு, மைசூரு, மண்டியா, ஹாசன் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொழிவு தாமதமானது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. கடந்த சில தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காவிரியின் முக்கிய துணை ஆறான கபிலா உற்பத்தி ஆகும் கேரளாவின் வயநாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மைசூருவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 17 ஆயிரத்து 555 கன அடி நீர் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல மண்டியா மாவட்டம் ரங்கப்பட்ணாவில் 124 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 80.60 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 339 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 118 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in