Published : 07 Jul 2023 06:33 AM
Last Updated : 07 Jul 2023 06:33 AM
சென்னை: சந்திரயான்-3 விண்கலம் 14-ம்தேதி மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திராயன் -2 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மார்க்-3)ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2019 ஜூலை 22-ல்விண்ணில் ஏவப்பட்டது. 2019 செப்டம்பரில் நிலவின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செய லிழந்தது.
அதேநேரம் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. தற்போது ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்வதுடன், பல்வேறு அரிய படங்களையும் அனுப்பி வருகிறது. இந்நிலையில் சந்திரயான்-3 திட்டத்தை சுமார் ரூ.615 கோடியில் செயல்படுத்த 2020-ம் ஆண்டு இஸ்ரோ முடிவு செய்தது. ஏற்கெனவே ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் அனுப்பப்பட உள்ளன.
இதற்கிடையே சந்திரயான் விண்கலத்தை ஜூலை 13-ல் விண்ணில் செலுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது ராக்கெட் ஏவுதல் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சந்திரயான்-3 விண்கலமானது எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14-ம் தேதி மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT