Published : 08 Jul 2014 09:00 AM
Last Updated : 08 Jul 2014 09:00 AM

விபத்து, இயற்கைச் சீற்றத்துக்கு 619 பேர் பலி: ஆந்திராவில் கடந்த ஒரே மாதத்தில் சோகம்

திருப்பதி விபத்து, இயற்கை சீற்றம் ஆகியவற்றுக்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த குழந்தைகள், பெண்கள், கல்லூரி மாணவர்கள், முதியோர் என 619பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வெள்ளம்

கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதி ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவ, மாணவியர் கல்விச் சுற்றுலாவிற்காக இமாச்சல பிரதேசத்திற்கு சென்றனர். அங்கு, பியாஸ் நதியின் அழகைக் கண்டு நதியின் நடுவில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத வெள்ளத்தில் 24 மாணவ, மாணவியர் அடித்துச் செல்லப்பட்டனர்.

அனல் காற்று

தொடர்ந்து, கடலோர ஆந்திராவில் அனல் காற்று வீசியது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

நெருப்பு

கிழக்கு கோதாவரி மாவட்டம் நகரம் கிராமத்தில் கெயில் நிறுவன எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட கசிவால், அயர்ந்து தூங்கிகொண்டிருந்த அந்த கிராம மக்கள் விடியலை பார்க்காமலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 22பேர் பலியான இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தையே உலுக்கி எடுத்தது.

இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள மவுலிவாக்கம் சம்பவம். இங்கு 11 மாடிக் கட்டிடம் சரிந்து விழுந்ததில் 62பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களே. எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தால், ஆந்திர கட்டிட தொழிலாளர்கள் நிலத்திற்கு அடியில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, திருவள் ளூர் மாவட்டம் உப்பரப்பாளையத் தில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இறந்த 11 பேரும் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் ஆவர்.

தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக இயற்கை சீற்றத்திற்கு மட்டும் 619 ஆந்திர அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர். இந்த சோக சம்பவம் இனியும் தொடராமல் அரசும், அரசு அதிகாரிக ளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மாநில பிரிவினையால் வேலை இல்லை

தெலங்கானா பிரச்சினையால் கடந்த 2 ஆண்டுகளாக ஆந்திர அரசு முடங்கியது. இதனால், தொழில் வளம் குன்றியது. தினக்கூலிகளாக பணியாற்றும் தொழிலாளர்கள், பிழைப்பு தேடி அண்டை மாநிலங் களில் குடி பெயர்ந்தனர்.

தெலங்கானா மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள், ஒடிசா, மகாராஷ்டிரா போன்ற மாவட்டங்களில் வேலை தேடி சென்றுள்ளனர்.

இதேபோன்று கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், தமிழகம், கர்நாடகா மாநிலங்களில் தினக்கூலிக்குச் செல்வதாக தெரிய வந்துள்ளது.

சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் அதிக ஊதியம் கிடைப்பதால், தொழிலாளர்கள் பிழைப்பிற்காக வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கட்டுமானத் தொழிலில் ஈடுபடு கின்றனர். மெட்ரோ ரயில் திட்டம், அடுக்கு மாடி கட்டிட தொழில், பாலங்கள் கட்டும் நிறுவனங்களில் தற்காலிக ஊழியர்களாக பணி புரிகின்றனர்.

தற்போது ஆந்திர மாநில பிரச்சினை ஓரளவு தீர்ந்துள்ள நிலையில், அங்குள்ள கூலித் தொழிலாளர்களின் பிரச்சினை களை ஆராய்ந்து அவர்களுக்கு நிரந்தர பணிகள் வழங்கப்பட்டால், இது போன்ற சம்பவங்கள் ஓரளவு குறையும் என கட்டிடத் தொழி லாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x