இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம்: அமெரிக்க தொழிலதிபர்களுக்கு அழைப்புவிடுத்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி, ஜோ பைடன்
பிரதமர் மோடி, ஜோ பைடன்
Updated on
1 min read

வாஷிங்டன்: தனது இரண்டரை நாள் அமெரிக்கப் பயணத்தை புலம்பெயர்ந்தோரிடம் உரையாற்றிய நிகழ்வுடன் நிறைவு செய்த பிரதமர் மோடி, அமெரிக்க வணிகச் சமூகத்தினரிடம் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு வலியுறுத்தினார்.

அமெரிக்க - இந்திய கூட்டாண்மை மன்றம் ஒருங்கிணைத்திருந்த கென்னடி நிகழ்த்துகலை மையத்தில் நடந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,"நீங்கள் எல்லோரும் அமெரிக்க கனவுடன் வாழ்கிறீர்கள், அந்தக்கனவு எப்படி ஒரு வலிமையான முடிவுடன் நிறைவடையும் என்று காட்டியிருக்கிறீர்கள்.

இந்தியா,அமெரிக்கா ஆகிய இருநாடுகளின் உறவு என்பது வெறும் வசதிக்கான கூட்டாண்மை மட்டும் இல்லை. இது நம்பிக்கையின் கூட்டாண்மை. இரு நாட்டுக்கு இடையேயான இந்த நல்லுறவு நாடுகளின் நலன், இரு நாட்டு மக்களின் நலனுக்கானது. அதனால் அதனை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானது.

இன்று, இந்தியாவின் தனிநபர் நுகர்வும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் கடந்த பத்து ஆண்டுகளில் 1.5 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதீத வறுமை படிப்படியாக முடிவுக்கு வருகிறது. அதேநேரத்தில் நடுத்தர வர்க்கம் வளர்ந்து வருகிறது. இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதுவே சரியான தருணம். இருநாட்டு அரசுகளும் அதற்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளன. இங்குள்ள வணிகச் சமூகம் இதனைப் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்". இவ்வாறு பிரதமர் பேசினார்.

இந்தநிகழ்வில், அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் அண்டனி பிளின்கென், யுஎஸ்ஐஎஸ்பிஎஃப் தலைவர் ஜான் சேம்பர் மற்றும் யுஎஸ்ஐஎஸ்பிஎஃப் சிஇஓ முகேஷ் ஆகியோர் மேடையில் பிரதமருடன் கலந்து கொண்டனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து ஆகியோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வினைத் தொடர்ந்து பிரதமர் மோடி, ரீகன் மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் புலம்பெயர்ந்தோர் மத்தியில் உரையாற்றினார்.

தனது பயணம் குறித்த ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி,"சிறப்பான அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொள்கிறேன். வளரும் தலைமுறையினருக்காக நமது பூமியை அமைதியான முறையில் மாற்ற இரண்டு நாடுகளும் இணைந்து செயல்படும்" என்று தெரிவித்திருந்தார். அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி அங்கிருந்து எகிப்து நாட்டுக்குச் சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in