Published : 14 Oct 2017 08:49 AM
Last Updated : 14 Oct 2017 08:49 AM
காங்கிரஸ் கட்சித் தலைவராக விரைவில் ராகுல் காந்தி பொறுப்பேற்பார் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி நேற்று டெல்லியில் தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘‘எனது மகனும் காங்கிரஸில் இரண்டாவது இடத்தில் இருப்பவருமான (துணைத் தலைவர்) ராகுல் காந்தி விரைவில் கட்சியின் தலைவராக பொறுப்பேற்பார். ராகுல் காந்தி எப்போது காங்கிரஸ் தலைவராவார் என்ற கேள்வியை பல ஆண்டுகளாக நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். அது இப்போதுதான் நடக்கிறது’’ என்றார்.
ஆனால், சோனியா காந்தியின் இந்தக் கருத்து பற்றி கேட்டபோது, ராகுல் அதுபற்றி பதிலளிக்காமல் பேச்சை திசை திருப்பினார். தீபாவளி பண்டிகைக்கு பின்னர், தலைமை பொறுப்பை அவர் ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் காரியக் கமிட்டி விரைவில் கூடி கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை முடிவு செய்யும் என்று தெரிகிறது. அதில் தலைவராக ராகுல் தேர்ந்தெடுக்கப்படுவார். 19 ஆண்டுகளுக்கு முன் கட்சியின் தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல, ராகுல் காந்தியும் தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT