ராகுலின் 21 நாள் அமெரிக்க பயணத்தில் மர்மம் - பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் மால்வியா குற்றச்சாட்டு

ராகுலின் 21 நாள் அமெரிக்க பயணத்தில் மர்மம் - பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் மால்வியா குற்றச்சாட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த மாத இறுதியில் அமெரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள இந்தியர்கள், தொழிலதிபர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகளை அவர் சந்தித்துப் பேசினார். 21 நாட்களுக்குப் பிறகு அவர் நேற்று மாலை தாயகம் திரும்பினார்.

இதுகுறித்து பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா ட்விட்டரில், ‘‘வெளிநாட்டில் ராகுல் காந்தி அதிக நாட்கள் செலவழிப்பது ஏன்? அவரது பயணத்தில் பெரும் பகுதி மர்மமாக உள்ளது. வெளிநாட்டு அமைப்புகள் மற்றும் குழுக்களுடன் அவரது ரகசிய கூட்டங்கள், நாட்டின் நலனுக்கு எதிரானவை என தகவல்கள் தெரிவிக்கின்றன’’ என கூறியுள்ளார்.

பிஹார் தலைநகர் பாட்னாவில் நாளை மறுதினம் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கூட்டியுள்ளார். 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்காக அவர் இந்த கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் பாஜக.வுக்கு எதிரான கட்சிகள் பங்கேற்கின்றன. இதில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி நாடு திரும்பியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in