Published : 09 Oct 2017 08:58 PM
Last Updated : 09 Oct 2017 08:58 PM
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் மீண்டும் 24 மணி நேரத்தில் 16 குழந்தைகள் இறந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் பாபா ராகவ் தாஸ் (பிஆர்டி) அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உட்பட 16 குழந்தைகள் இறந்துள்ளன. இத்தகவலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘மருத்துவமனையில் பிரசவமான குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் 10 குழந்தைகள், குழந்தைகள் சிகிச்சை வார்டில் இருந்த 6 குழந்தைகள் என மொத்தம் 16 குழந்தைகள் கடந்த 24 மணி நேரத்தில் இறந்துவிட்டன. பெரும்பாலான குழந்தைகள் மூளையில் தொற்று ஏற்பட்டதால் அனுமதிக்கப்பட்டிருந்தன’’ என்றனர்.
பிஆர்டி மருத்துவமனை மருத்துவர்கள் கூறும்போது, ‘‘இந்த முறை ஆக்ஸிஜன் பற்றாக்குறை அல்லது சிகிச்சை இல்லாமல் குழந்தைகள் இறக்கவில்லை. உண்மையில் மிக மோசமான நிலையில்தான் அந்தக் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன’’ என்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இதே மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 63 குழந்தைகள் இறந்தன. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கமிஷன் தராததால், ஆக்ஸிஜன் சிலிண்டர் சப்ளையை தனியார் நிறுவனம் நிறுத்தி விட்டது. அதனால் ஆக்ஸிஜன் விநியோகம் இல்லாமல் குழந்தைகள் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மருத்துவமனை டீன் மற்றும் டாக்டர்கள், ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நிறுவனத் தலைவர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் பிஆர்டி மருத்துவமனையில் ஒரே நாளில் 16 குழந்தைகள் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT