Published : 06 Oct 2017 09:23 AM
Last Updated : 06 Oct 2017 09:23 AM
சமாஜ்வாதி கட்சித் தலைவராக அகிலேஷ் யாதவ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் கட்சி தலைவராக அகிலேஷ் யாதவ் மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை சமாஜ்வாதி மூத்த தலைவர் ராம்கோபால் அறிவித்தார். மேலும், கட்சித் தலைவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக நீட்டித்தும் கட்சி சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்மூலம் 5 ஆண்டு சமாஜ்வாதி தலைவராக அகிலேஷ் இருப்பார்.
சில மாதங்களுக்கு முன் நடந்த உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் சமாஜ்வாதி கட்சியில் அகிலேஷின் தந்தை முலாயம் சிங் யாதவ், அவரது தம்பி சிவபால் சிங் யாதவ் மற்றும் அகிலேஷூக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் கட்சி பிளவுபட்டது. அகிலேஷ் தலைமையில் இருப்பதுதான் சமாஜ்வாதி கட்சி என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிலிருந்து முலாயம் சிங் ஒதுங்கியே உள்ளார்.
தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு முலாயமை அகிலேஷ் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். ஆனாலும் நேற்றைய கூட்டத்தில் முலாயம் கலந்து கொள்ளவில்லை. முலாயம் சிங், சிவபால் சிங் ஆகியோருடன் தொலைபேசியில் பேசியதாகவும் அவர்கள் ஆசி வழங்கியதாகவும் கூட்டத்தில் பேசிய அகிலேஷ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT