Last Updated : 13 Oct, 2017 09:26 AM

 

Published : 13 Oct 2017 09:26 AM
Last Updated : 13 Oct 2017 09:26 AM

5 நாட்கள் பரோல் நிறைவடைந்து: பெங்களூரு சிறைக்கு திரும்பினார் சசிகலா- வழிநெடுக தொண்டர்கள் வரவேற்பு

சென்னையில் தங்கியிருந்த அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலாவின் 5 நாட்கள் பரோல் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று பெங்களூரு சிறைக்கு திரும்பினார். சென்னையில் இருந்து காரில் வந்த சசிகலாவை வழிநெடுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிறை நிர்வாகம் கடந்த 6-ம் தேதி அவருக்கு 5 நாள் அவசர பரோல் விடுப்பு வழங்கியது.

இதையடுத்து சென்னை சென்ற சசிகலா அங்கு தனியார் மருத்துவமனையில் கணவர் நடராஜனை சந்தித்து நலம் விசாரித்தார். சிறை நிர்வாகம் விதித்த நிபந்தனைகளின்படி அரசியல் கூட்டங்கள், ஊடகங்களை சந்திப்பதை தவிர்த்தார். 5 நாள் பரோல் நேற்று முன்தினம் முடிந்தது.

சென்னை தி.நகரில் இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாவின் வீட்டில் சசிகலா தங்கியிருந்தார். நேற்று காலை 7 மணி முதல் தி.நகர் வீடு முன்பாக நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். காலை 8.30 மணிக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி ரெத்தின சபாபதி, கதிர்காமு ஆகியோர் சசிகலாவை சந்தித்தனர்.

பின்னர் காலை 9 மணிக்கு அவர் காரில் பெங்களூரு புறப்பட்டார். அவருடைய காரை தொடர்ந்து திவாகரனின் மகன் ஜெய ஆனந்த், இளவரசியின் மகன் விவேக், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் கார்களும் பின் தொடர்ந்து சென்றன. தன்னுடன் காரில் வந்த டிடிவி தினகரன், டாக்டர் வெங்கடேஷ், விவேக், ராஜாராமன் உள்ளிட்டோருடன் சசிகலா சிறை வரை பேசிக்கொண்டே வந்தார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையை அடையும் வரை வழிநெடுக தொண்டர்கள் சசிகலாவை வரவேற்றனர். தன்னுடன் காரில் வந்த டிடிவி தினகரன் உள்ளிட்டோருடன் சசிகலா சிறை வரை பேசிக்கொண்டே வந்தார்.

நேற்று மாலை பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு திரும்பிய சசிகலாவை கர்நாடக அதிமுக (அம்மா) செயலாளர் புகழேந்தி தலைமையிலான தொண்டர்கள் வரவேற்றனர். சிறை வளாகத்தில் சிறிது நேரம் டிடிவி தினகரனுடன் பேசிய சசிகலா மாலை 4.35 மணியளவில் சிறை அலுவலகத்தின் உள்ளே நுழைந்தார். முதன்மை கண்காணிப்பாளர் சோமசேகர் முன்னிலையில் ஆஜராகி, சிறை கோப்புகளில் கையெழுத்திட்டார். வழக்கறிஞர்கள் கிருஷ்ணப்பன், அசோகன் ஆகியோர் சிறை அலுவல்களை முடித்த பிறகு, மகளிர் சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x