Published : 16 Oct 2017 09:32 AM
Last Updated : 16 Oct 2017 09:32 AM

வீரபத்ர சிங் அரசில் இருந்து அமைச்சர் அனில்சர்மா ராஜினாமா; பாஜகவில் சேர்ந்தார்: இமாச்சலில் காங்கிரஸுக்கு பின்னடைவு

அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ள இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமின் மகனும் மாநில அமைச்சருமான அனில்சர்மா ராஜினாமா செய்தார்.

இமாச்சல் சட்டப்பேரவைக்கு நவம்பர் 9-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், முதல்வர் வீரபத்ர சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசில் இருந்து கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அனில் சர்மா நேற்று ராஜினாமா செய்தார். காங்கிரஸில் இருந்தும் விலகிய அவர், பாஜகவில் சேர்ந்தார். முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமின் மகனான அனில் சர்மா, காங்கிரஸ் கட்சியில் தனது தந்தையும் தானும் ஓரம் கட்டப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சிம்லாவில் பேட்டியளித்த அனில் சர்மா கூறியதாவது:

மாநில அமைச்சர் பதவியில் இருந்து விலகிவிட்டேன். பாஜகவில் இன்று சேர்ந்துள்ளேன். எனது தந்தையும் நானும் காங்கிரஸில் ஓரம்கட்டப்பட்டு புறக்கணிக்கப்பட்டோம். மாண்டி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எனது தந்தை சுக்ராமுக்கு அழைப்பு விடுத்தார். அங்கு சுக்ராம் சென்ற போது கலந்து கொள்ளக் கூடாது என்று தடுக்கப்பட்டார்.

சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளில் காங்கிரஸின் எந்த ஒரு குழுவிலும் என் பெயர் இல்லை. இதுபற்றி கேட்டபோது கட்சி மேலிடம் என் பெயரை நீக்கிவிட்டதாக சொன்னார்கள். மனம் வருத்தப்பட்டு காங்கிரஸில் இருந்து வெளியேற முடிவு செய்தேன். தேர்தலில் மாண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டி யிடுவேன்.

இவ்வாறு அனில் சர்மா கூறினார். இமாச்சால பிரதேசத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அனில் சர்மாவின் விலகல் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x