தெலங்கானா ரயில் விபத்து பலி எண்ணிக்கை உயர்வு: மேலும் ஒரு மாணவி சாவு

தெலங்கானா ரயில் விபத்து பலி எண்ணிக்கை உயர்வு: மேலும் ஒரு மாணவி சாவு
Updated on
1 min read

தெலங்கானா மாநிலம் மேதக் மாவட்டத்தில் பள்ளிக்கூட பஸ் மீது ரயில் மோதிய விபத்தில் பலியான மாணவர்கள் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 18 ஆக உயர்ந்தது. மேதக் மாவட்டம் மாசாய் பேட்டா பகுதியில், கடந்த 7-ம் தேதி வியாழக்கிழமை காலை ஆளில்லா ரயில்வே கேட் வழியாக சென்ற பள்ளிக்கூட பஸ் மீது நாந்தேட் பயணிகள் ரயில் மோதியதில் 17 மாணவ, மாணவிகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.

இதில் காயமடைந்த 19 பேர் செகந்திராபாத் யசோதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செவ்வாய்க் கிழமை மாணவி வைஷ்ணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலியான மாணவர்கள் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்தது. சிகிச்சை பெற்று வரும் பிரசாந்த், சரத், வருண் கவுட் ஆகியோரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அபினந்த், சிவகுமார் ஆகிய மாணவர்கள் செவ்வாய்க்கிழமை உடல் நலம் தேறி அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in