மணிப்பூரில் மீண்டும் வன்முறை | குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழப்பு

மணிப்பூரில் மீண்டும் வன்முறை | குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

இம்பால்: மணிப்பூரில் நேற்றிரவு ஆயுதக் குழுக்கள் நடத்திய குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.

மணிப்பூரில் குகி பழங்குடி மக்களுக்கும் மெய்த்தி சமூக மக்களுக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி முதல் மோதல் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஆயுதக் குழுக்கள் நடத்திய குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் நேற்றிரவு 11 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள காமென்லோக் என்ற கிராமத்தில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

முதலில், காமென்லோக் கிராமத்தில் உள்ள வீடுகள் மீது ஆயுதக் குழுக்கள் குண்டுகளை வீசி உள்ளனர். இதில், வீடுகளில் இருந்த பலர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டு வீச்சில் இருந்து தப்பிக்கும் நோக்கில் வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள் மீது ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.

இதிலும், பலர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்ததை அடுத்து, பாதுகாப்புப் படையினருக்கும் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக செய்தி வெளியாகி உள்ளது. ஆயுதக் குழுக்களிடம் நவீன ஆயுதங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎல்பி தலைவர் ஓக்ராம் இபோபி, "மணிப்பூரில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது பாஜக மூத்த தலைவர்கள் பலரும் மணிப்பூருக்கு வந்த வண்ணம் இருந்தனர். ஆனால், இன்று அவர்கள் யாரும் இங்கு வருவதில்லை. மே 3-ம் தேதி முதல் தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. இருந்தும் பிரதமர் மோடி இது குறித்து பேச மறுக்கிறார். 10 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் டெல்லி சென்று இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரில் வலியுறுத்த இருக்கிறோம். மாநில அரசும், இந்த வன்முறை குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த வன்முறையைக் கண்டித்து பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் முன்னாள் முதல்வர் ஆர்.கே. தோரேந்திராவின் வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த வேண்டும் என்றும், மெய்த்தி சமூக மக்களிடம் பாகுபாடு காட்டும் அஸ்ஸாம் ரைபில்ஸ் படையினரை, மணிப்பூரில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in