Published : 27 Oct 2017 08:49 AM
Last Updated : 27 Oct 2017 08:49 AM
வருகிற மே மாதம் முதல் வாரத்தில் கர்நாடக சட்டப்பேரவைக்கு பொது தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையின் 14-வது தேர்தல் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி நடந்தது. இதில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி அமைத்தது. இந்த ஆட்சி வருகிற 2018-ம் ஆண்டு மே 28-ம் தேதியுடன் நிறைவடைகிறது. குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து கர்நாடக சட்டப்பேரவைக்கும் தேர்தல் தேதி அறிவிக்க திட்டமிட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையின் 15-வது தேர்தல் வருகிற 2018-ம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும் பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான ஆரம்ப கட்ட ஏற்பாடுகள் குறித்து கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் மாநில அரசிடம் ஆலோசனை நடத்தியுள்ளது.
அப்போது கர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி மற்றும் பியூசி வகுப்புகளுக்கான இறுதி தேர்வு வருகிற மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு சட்டப்பேரவை தேர்தல் இடையூறாக அமைய கூடாது. பள்ளி ஆசிரியர்களின் தேர்வு பணிகள் முடிந்த பிறகு தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசித்ததாக தெரிகிறது.
தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையை தொடர்ந்து ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக விரைவில் தேர்தல் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தை நவம்பர் முதல் வாரத்தில் தொடங்க காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் முடிவெடுத்துள்ளன.
பாஜக சார்பாக பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரும், காங்கிரஸ் சார்பில் துணைத் தலைவர் ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT