Last Updated : 23 Oct, 2017 05:16 PM

 

Published : 23 Oct 2017 05:16 PM
Last Updated : 23 Oct 2017 05:16 PM

குஜராத் தேர்தல்; புகார் கூறும் எதிர்க்கட்சிகள்: எப்போது அறிவிக்கும் தேர்தல் ஆணையம்?

 தேர்தலில், பல்வேறு விஷயங்களும் சர்ச்சைக்குள்ளாவது வாடிக்கை. ஆனால், குஜராத் சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்தவரை தேதி அறிவிப்பே சர்ச்சையாகியுள்ளது.

'குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்க பிரதமர் மோடியின் ஒப்புதலுக்காக தேர்தல் ஆணையம் காத்திருக்கிறதா' என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்புகிறார். ஆனால், 'தேர்தல் ஆணையத்தின் முடிவை கேள்வி கேட்க எதிர்க்கட்சிகளுக்கு அதிகாரம் இல்லை' என்கிறார் பிரதமர் மோடி.

'குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் முன்பாக, நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்டங்களை அறிவிக்க, பாஜக அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது' என காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.

இதற்கு ஏற்ப, பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிப்போவது, தேர்தல் ஆணைய நடைமுறைகள் குறித்து, தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் தொடர்பு கொண்டு கேட்டோம்.

அவர் கூறுகையில், ''இமாச்சல பிரதேச மாநிலத்தில், பனிப்பொழிவு இருக்கும் என்பதால், நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அதேசமயம், குஜராத் மாநிலத்தில், வெள்ள பாதிப்பு காரணமாக தேர்தல் நடத்த அவகாசம் வேண்டும் என அம்மாநில அரசு கோரியுள்ளது. இதை ஏற்று தேர்தல் தேதியை உடனடியாக அறிவிக்காமல், அங்குள்ள சூழ்நிலை குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.

 அந்தந்த மாநில சூழ்நிலையை கருத்தில் கொண்டே, தேர்தல் தேதி தொடர்பாக, தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். எனினும், இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவு வெளியாகும் முன்பு, குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. விரைவில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என நம்புகிறேன்'' என நரேஷ் குப்தா கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x