Published : 08 Jun 2023 01:54 PM
Last Updated : 08 Jun 2023 01:54 PM

டெல்லியில் வரும் 11-ம் தேதி கூடுகிறது இந்தியா - வங்கதேச எல்லை மாநாடு

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பங்களாதேஷை ஒட்டிய எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காட்சி | கோப்புப் படம்

புதுடெல்லி: இந்தியா, வங்கதேச நாடுகளின் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளின் 4 நாள் மாநாடு புதுடெல்லியில் வரும் 11-ம் தேதி தொடங்குகிறது.

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர், வங்கதேசத்தை ஒட்டிய 4 ஆயிரத்து 96 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லையை பாதுகாத்து வருகின்றனர். இதேபோல், வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவர்களின் எல்லையை பாதுகாத்து வருகின்றனர். எல்லை மூலமாக ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், இரு தரப்புக்கும் இடையே சுமுக சூழல் இருப்பதை உறுதிப்படுத்தவும் கடந்த 1975-ம் ஆண்டு முதல் இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. 1993 முதல் ஆண்டுக்கு இருமுறை மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது நடைபெற இருப்பது 53வது மாநாடு. இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளின் மாநாடு இதற்கு முன் கடந்த ஆண்டு ஜூலையில் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்றது. இரு நாடுகளின் தலைநகரங்களில் மாற்றி மாற்றி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. புதுடெல்லியில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்பதற்காக பங்களாதேஷின் எல்லைப் பாதுகாப்புப் படை தலைவர் நஜ்முல் ஹசன் தலைமையில் 15 பேர் அடங்கிய குழு வரும் 10-ம் தேதி புதுடெல்லி வர இருக்கிறது. இந்திய குழுவுக்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவர் சுஜோய் லால் தாவோசென் தலைமை தாங்க இருக்கிறார்.

இந்த மாநாட்டில் இந்திய தரப்பில் உள்துறை, வெளியுறவுத்துறை, போதைப் பொருள் ஒழிப்புத் துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச எல்லையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது, பல்வேறு பொருட்களைக் கடத்துபவர்களைத் தடுப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x