Last Updated : 20 Oct, 2017 10:44 AM

 

Published : 20 Oct 2017 10:44 AM
Last Updated : 20 Oct 2017 10:44 AM

பாஜக.வுக்கு சவாலாக அமையும் உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தல்

உ.பி.யில் உள்ளாட்சி தேர்தல் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. நாடாளுமன்ற மக்களவைக்கு 2019-ல் தேர்தல் வரவிருக்கும் நிலையில் உள்ளாட்சி தேர்தல் வெற்றி பாஜகவுக்கு சவாலாகி வருகிறது.

உ.பி.யில் உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்குள்ள 75 மாவட்டங்களில் சுமார் மூன்றரை கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 2012-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 13 மாநகராட்சிகளில் 11-ல் பாஜகவினர் வெற்றி பெற்றனர். இதையடுத்து நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்நிலையில் 2019-ல் மக்களவை தேர்தல் வருவதால் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது பாஜகவுக்கு அவசியமாகிறது.

பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து பாஜகவின் நட்சத்திர பிரச்சாரகராக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிறுத்தப்பட்டு வருகிறார். கேரளாவில் இடதுசாரி அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தின் தேர்தல் பிரச்சாரத்திலும் யோகி முக்கிய இடம் பெற்றுள்ளார். இமாச்சலபிரதேச தேர்தல் பிரச்சாரத்திலும் யோகியின் பெயர் முன்னணியில் உள்ளது.

இந்நிலையில் உ.பி. உள்ளாட்சி தேர்தலிலும் முதல்வர் யோகியே பிரதான பிரச்சாரகராக இருப்பார். எனினும், உ.பி.யில் ஆட்சிக்கு வந்தது முதல் யோகி அரசின் சாதனைகள் சொல்லும்படியாக இல்லை. மாறாக கோரக்பூர் குழந்தைகள் இறப்பு சம்பவம் பெரும் பிரச்சினையாகி வருகிறது. இத்துடன் மதரீதியான விவகாரங்கள் மீது உ.பி. பாஜகவினரின் சர்ச்சைக்குரிய கருத்துகள் மக்களிடையே கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

இம்மாநிலத்தில் பாஜகவின் முக்கிய ஆதரவு வாக்காளர்களாக ‘பனியா’ எனும் வியாபார சமூகத்தினர் உள்ளனர். இவர்கள் ஜிஎஸ்டி வரி மற்றும் அதற்கு முன் அமலான பணமதிப்பு நீக்கத்தால் அதிருப்தியில் உள்ளனர். இவர்களை திருப்திபடுத்தி மீண்டும் பாஜக பக்கம் திருப்ப வேண்டி உள்ளது. உள்ளாட்சி தேர்தலின் தாக்கம் 2019 மக்களவை தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் உ.பி.யில் இந்த தேர்தல் பாஜகவினருக்கு சவாலாக அமைந்துள்ளது.

இதற்கிடையே, மத்தியில் பிரதமர் மோடிக்கு எதிராக ஒன்று திரளும் எதிர்க்கட்சிகள் உ.பி. உள்ளாட்சி தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. சமாஜ்வாதி பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது தங்களுக்கு சாதகமாக அமையும் என பாஜக கருதுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x