Published : 10 Oct 2017 10:02 AM
Last Updated : 10 Oct 2017 10:02 AM

உ.பி. கோரக்பூர் மருத்துவமனையில் மீண்டும் ஒரே நாளில் 16 குழந்தைகள் இறப்பு

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் மீண்டும் 24 மணி நேரத்தில் 16 குழந்தைகள் இறந்தன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் பாபா ராகவ் தாஸ் (பிஆர்டி) அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உட்பட 16 குழந்தைகள் இறந்துள்ளன. இத்தகவலை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் நேற்று கூறும்போது, ‘‘மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 10 குழந்தைகள், குழந்தைகள் சிகிச்சை வார்டில் 6 குழந்தைகள் என மொத்தம் 16 குழந்தைகள் கடந்த 24 மணி நேரத்தில் இறந்துவிட்டன. பெரும்பாலான குழந்தைகள் மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் அனுமதிக்கப்பட்டிருந்தன’’ என்றனர்.

பிஆர்டி மருத்துவமனை மருத்துவர்கள் கூறும்போது, ‘‘இந்த முறை ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலோ அல்லது உரிய சிகிச்சை இல்லாமலோ குழந்தைகள் இறக்கவில்லை. உண்மையில் மிக மோசமான நிலையில்தான் அந்தக் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன’’ என்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இதே மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 63 குழந்தைகள் இறந்தன. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிஆர்டி மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் தனியார் நிறுவனத்துக்கு நிலுவைத் தொகை அதிகமாக இருந்துள்ளது.

அதை வழங்க கமிஷன் தரவேண்டும் என்று மருத்துவமனையில் இருந்தவர்கள் கட்டாயப்படுத்தி உள்ளனர். அதனால் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சப்ளை செய்ய அந்நிறுவனம் மறுத்துள்ளது. இதையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளை தடைபட்டது. இதனால் 63 குழந்தைகள் இறந்தன.

கோரக்பூர் தொகுதி எம்.பி.யாக இருந்தவர் முதல்வர் யோகி ஆதித்யநாத். இந்த சோக சம்பவம் குறித்து ஆதித்யநாத் கூறும்போது, ‘ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் குழந்தைகள் இறக்கவில்லை’ என்று கூறினார். ஆனால், உயர்நிலைக்குழு விசாரணையில் சிலிண்டர்கள் பற்றாக்குறையே குழந்தைகள் இறப்புக்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மருத்துவமனை டீன் மற்றும் டாக்டர்கள், ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்தின் தலைவர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் பிஆர்டி மருத்துவமனையில் ஒரே நாளில் 16 குழந்தைகள் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x