Published : 26 Oct 2017 09:30 AM
Last Updated : 26 Oct 2017 09:30 AM

திருமலையில் உணவு பொருட்கள் அதிக விலை: தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

திருமலையில் உணவுப் பண்டங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது குறித்த வழக்கில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி நேரில் ஆஜராக ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமும் சுமார் 1 லட்சம் பக்தர்கள் வந்து செல்லும் திருமலையில் சிறிய சிற்றுண்டி கடைகள் முதல் ஹோட்டல்கள் வரை உணவுப் பண்டங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் கூறப்படுகிறது. மற்ற கடைகளிலும் தண்ணீர் பாட்டில், குளிர் பானங்கள் முதல் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வரை அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் இவை அதிகபட்ச சில்லரை விலையை விட கூடுதலாக இருப்பதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை என்றும் கூறுகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக, சித்தூரில் உள்ள பரிகார சேவா சமிதி எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம், கடந்த ஆண்டு நவம்பரில் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் இதுகுறித்து நீதிமன்றம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் தேவஸ்தானம் தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த விவகாரத்தில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார். மேலும் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படும் பிரச்சினையில் தேவஸ்தான அதிகாரிகள் கண்ணை மூடிக்கொண்டு இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x