

ஓங்கோல்: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து நிகழ்ந்தது. இதில் சுமார் 275 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். இந்த விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் மற்றொரு விபத்து ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம், மசூலிப் பட்டினத்தில் இருந்து திருப்பதிக்கு நேற்று புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில், பிரகாசம் மாவட்டம் டங்கடூர் அருகே வந்தபோது, திடீரென ரயிலில் புகை கிளம்பியது. இது உடனடியாக தீயாக பரவியது. இதைக்கண்டு அதிர்ச்சிஅடைந்த பயணிகள், உடனே ரயிலில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.
இதையடுத்து அவர்கள் கீழே இறங்கி தப்பியோட முயன்றனர். ஆனால் இதற்குள் தகவல் அறிந்து, குறிப்பிட்ட பெட்டிக்கு வந்த ரயில்வே அதிகாரிகள் அந்த தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, பயணிகள் தப்பினர்.
லூப்ரிகண்ட் தீர்த்து போனதால், உராய்வு காரணமாக சக்கரத்தில் இருந்து தீ வந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். பிறகு அந்த ரயிலில் மராமத்து பணிகள் செய்யப்பட்டு, மீண்டும் திருப்பதிக்கு புறப்பட்டது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.