Published : 05 Jun 2023 04:01 PM
Last Updated : 05 Jun 2023 04:01 PM

திருமணமான மறுநாளில் மாரடைப்பால் உயிரிழந்த தம்பதி - உ.பி.யில் சோகம்

பிரதிநிதித்துவப் படம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் திருமணமான அடுத்த நாளே புதுமணத் தம்பதி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதாப் யாதவ் (24). இவர் புஷ்பா யாதவ் (22) என்பவரை கடந்த செவ்வாய்க்கிழமை திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு மறுநாள் பஹாரைச் பகுதிக்கு உட்பட்ட காசியார்கஞ்ச் பகுதியில் உள்ள கோதியா எனும் கிராமத்துக்குத் திரும்பினர். அதுதான் மணமகனின் சொந்த ஊர். அன்றைய தினம் திருமணத்துக்குப் பிந்தைய சடங்குகளை நிறைவு செய்து இரவு உறங்கச் சென்றுள்ளனர். ஆனால், காலையில் அவர்கள் அறையில் பேச்சுமூச்சின்றி கிடந்தனர்.

உறவினர்கள் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும் மாரடைப்பு காரணமாக அவர்கள் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இது தொடர்பாக பல்ராம்பூர் எஸ்.பி. பிரஷாந்த் வர்மா அளித்தப் பேட்டியில், "உயிரிழந்த புதுமணத் தம்பதியின் உடல்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். லக்னோவில் உள்ள தடய அறிவியல் ஆய்வுக் கூடத்தில் வைத்துள்ளோம். திடீர் மரணத்துக்கான காரணத்தை ஆய்வு செய்ய அந்த உடல்கள் தேவைப்படும்" என்றார். ஆனால் உள்ளூர் போலீஸாரோ அந்தத் தம்பதி உறங்கிய அறையில் பெயருக்குக் கூட காற்று செல்ல இடமில்லை. அதனால் அவர்கள் மூச்சுத் திணறியே இறந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

காசியார்கஞ்ச் காவல் துறை ஆய்வாளர் ராஜ்நாத் சிங், "வீட்டின் அந்த அறையை யாரும் அத்துமீறி நுழைந்ததற்கான அடையாளம் ஏதும் இல்லை. அதேபோல் தம்பதியின் உடலில் காயமும் ஏதும் இல்லை. வேறு குற்றப் பின்னணிக்கான தடயமும் ஏதுமில்லை. அந்தத் தம்பதி அன்றைய தினம் என்ன சாப்பிட்டனர் என்னவெல்லாம் செய்தனர் என் அனைத்து விவரங்களையும் திரட்டி வருகிறோம். அவர்கள் இருந்த அறையில் காற்றோட்டமே இல்லாததால் மூச்சுத் திணறல் மட்டுமே உயிரிழப்பிற்குக் காரணமாக இருக்க முடியும்" என்றனர்.

இந்தியாவில் அண்மைக் காலமாக உயிரிழப்புகளுக்கான முதன்மைக் காரணமாக மாரடைப்பு உள்ளது. உலக சுகாதார நிறுவனமும் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக இறப்புக்கான காரணமாக புற்றுநோயை விஞ்சி மாரடைப்பே இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x