Published : 03 Jun 2023 11:18 AM
Last Updated : 03 Jun 2023 11:18 AM

'இதயத்தை நொறுக்குகின்றது' - ஒடிசா ரயில் விபத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் 

ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்துக்கு கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே நேற்று (ஜூன் 2) இரவு மற்றொரு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில்கள் மோதிய இந்த விபத்தில் 238 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த கோர விபத்து சம்பவத்துக்கு உலகம் முழுவதும் பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்விட்டரில் வெளியிட்டுள்ள தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து குறித்த படங்களும் தகவல்களும் என் இதயத்தை நொறுக்குகின்றன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவிப்பவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த கடினமான சூழலில், இந்திய மக்களுடன் கனடா நாட்டு மக்கள் துணை நிற்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 238 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று காலை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி செய்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 867 பேர் இந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தாலும் கூட எத்தனை பேர் பயணித்தனர் என்ற உறுதியான தகவல் இன்னும் தெரியவில்லை. பலியான தமிழர்களின் எண்ணிக்கை 35 ஆக இருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x