

புதுடெல்லி: இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடியை 10 கோடி பேர் பின் தொடர்கின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அவர் இணைந்த சில மணி நேரங்களில் 50,000 பேர் அவரை பின் தொடர்ந்தனர். கடந்த 2018ம் ஆண்டில் இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை பின் தொடர்வோர் எண்ணிக்கை ஒரு கோடியாக உயர்ந்தது.
கடந்த 2020-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 4 கோடியாக அதிகரித்தது. கடந்த 2022ம் ஆண்டில் 7 கோடி பேர், 2023ம் ஆண்டில் 8 கோடி பேர், 2024ம் ஆண்டில் 9 கோடி பேர், 2025ம் ஆண்டில் 9.5 கோடி பேர் என பின் தொடர்வோரின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது.
தற்போது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டி உள்ளது. இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்வோரை கொண்ட உலகத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உருவெடுத்துள்ளார். இதன் மூலம் அவர் புதிய சாதனையை படைத்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடிக்கு அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை 4.32 கோடி பேர் பின் தொடர்கின்றனர். இந்தோனேசிய அதிபர் பிரபோவா சிபியாண்டோவை 1.5 கோடி பேரும், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுாலா டா சில்வாவை 1.44 கோடி பேரும், துருக்கி அதிபர் எர்டோகனை 1.16 கோடி பேரும், அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலேவை 64 லட்சம் பேரும் பின் தொடர்கின்றனர்.
இந்திய அளவிலான இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடிக்கும் இதர தலைவர்களுக்கும் இடையிலான இடைவெளி மிக, மிக அதிகமாக உள்ளது.