

அச்சன்புதூர் அருகே உள்ள குளத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள்.
தென்காசி: தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். மேலும், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலும் யானைகள் அவ்வப்போது வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அச்சன் புதூர் அருகே உள்ள நெடுவயல் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள தென்னந்தோப்பில் 2 காட்டு யானைகள் புகுந்துள்ளன. நேற்று காலை இதை பார்த்த விவசாயிகள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர், வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பகல் நேரத்தில் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினால் குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடும் அபாயம் நிலவியது. இந்நிலையில், நேற்று பகலில் யானை கள் அருகில் உள்ள குளத்தில் தஞ்சமடைந்தன.
அவை அங்கிருந்து வெளியேறாதவாறு கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் யானைகளை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர். அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், அச்சன்புதூர்–தென்காசி சாலையில் போக்குவரத்துக்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. அச்சன்புதூர் அரசுப் பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.