முதுமலை முகாமுக்கு கொண்டுவரப்பட்ட குட்டி யானை: பராமரிக்கும் பணியை பொம்மனிடம் வனத்துறை ஒப்படைப்பு

தருமபுரியிலிருந்து கொண்டுவரப்பட்டு முதுமலையிலுள்ள மரக்கூண்டில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் குட்டி யானை , பாகன் பொம்மனுடன் விளையாடுகிறது.
தருமபுரியிலிருந்து கொண்டுவரப்பட்டு முதுமலையிலுள்ள மரக்கூண்டில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் குட்டி யானை , பாகன் பொம்மனுடன் விளையாடுகிறது.
Updated on
1 min read

முதுமலை: தருமபுரி மாவட்ட வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானை முதுமலைக்கு கொண்டுவரப்பட்டதுடன், அதனை பராமரிக்கும் பணி ஆஸ்கர் விருது ஆவண குறும்படத்தில் இடம்பெற்ற பாகன் பொம்மன் வசம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த வாரம் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வனப்பகுதியில் தாயை பிரிந்த 5 மாத ஆண் குட்டி யானை தனியாக வந்தது. அந்த யானையை தாயிடம் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

ஆனால், விவசாய கிணற்றில் தவறி விழுந்து குட்டி யானை காயமடைந்தது. இதனால், தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, குட்டி யானையை வனத்துறை ஊழியர் மகேந்திரன் ஒரு வாரம் பராமரித்தார்.

இதற்கிடையே, குட்டி யானையை முதுமலைக்கு அனுப்பி பராமரிக்க வனத்துறை முடிவு செய்தது. அந்த குட்டி யானையை அழைத்துச் செல்வதற்காக ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்திருந்த பாகன் பொம்மன் முதுமலையிலிருந்து வரவழைக்கப்பட்டார்.

அவரது கண்காணிப்பில், லாரியில் ஏற்றப்பட்டு முதுமலைக்கு குட்டி யானை கொண்டுவரப்பட்டது. வனச்சரகர்கள் மனோஜ்குமார், மனோகரன் ஆகியோர் குட்டி யானையை வரவேற்று பெற்றுக்கொண்டனர். முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் குட்டி யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

குலதெய்வத்துக்கு பூஜை செய்து, ஆரத்தி எடுத்து குட்டி யானையை ‘க்ரால்’ எனப்படும் கூண்டுக்கு பொம்மன் அழைத்துச் சென்றார். முதலில் அடம்பிடித்த குட்டி யானை, பின்னர் உள்ளே சென்று பொம்மனிடம் விளையாட ஆரம்பித்தது. அங்கு, அதனை படுக்கவைக்க பஞ்சு மெத்தை தயாராக இருந்தது.

இதுதொடர்பாக வனச்சரகர் மனோகரன் கூறும்போது, "குட்டி யானை நல்ல நிலையில் உள்ளது. தருமபுரி காலநிலை அதிக வெப்பம் கொண்டது. அதனால், முதுமலை காலநிலைக்கு குட்டி யானை பழக வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால், குட்டி யானை சில மாதங்கள் கூண்டிலேயே இருக்கும்" என்றார்.

ரகு, அம்மு ஆகிய யானைகளை வளர்த்து ஆஸ்கர் புகழ்பெற்ற பொம்மன் - பெள்ளி தம்பதி, தற்போது மீண்டும் ஒரு குட்டி யானையை வளர்க்க ஒப்படைக்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in