உடுமலை, அமராவதி வனப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீருக்காக இடம் பெயரும் விலங்குகள்

உடுமலை, அமராவதி வனப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீருக்காக இடம் பெயரும் விலங்குகள்
Updated on
1 min read

உடுமலை: உடுமலையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரகங்கள் அமைந்துள்ளன. அரிய வகை வனச்சூழல் மண்டலமாக உள்ளது.

இம்மலை பகுதிகளில், கடந்த சில நாட்களாக கடும் வறட்சி நிலவுகிறது. வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதனால், உணவு மற்றும் குடிநீருக்காக வன உயிரினங்கள் இடம்பெயர்ந்து வருகின்றன. இரண்டு வனச்சரகங்களிலும் காட்டாறுகள், ஓடைகளின் குறுக்கே50-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன.

ஆனாலும், சில இடங்களில் மட்டுமே தண்ணீர் இருப்பதாகவும், பெரும்பாலான தடுப்பணைகள் வறண்டு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, "உடுமலை - மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைப்பகுதிக்கு யானைகள், காட்டு மாடுகள், மான் கூட்டங்கள் செல்கின்றன.

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மக்கள், சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அவ்வழியாக சென்று வருகின்றனர். உடுமலை, அமராவதி வனச்சரகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வன எல்லை கிராமங்களுக்கும் கோடை காலத்தில், யானை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட வன விலங்குகள்,

குடிநீர், உணவு தேடி வரும் போது, வழி தவறி குடியிருப்பு அல்லது விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இது குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in