Published : 22 Nov 2022 09:29 PM
Last Updated : 22 Nov 2022 09:29 PM

முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலம் | கிரானைட் முதலாளிகள் கழுகுப் பார்வையில் தப்பிய மதுரை அரிட்டாப்பட்டி!

அரிட்டாப்பட்டி மலைப்பகுதி.

மதுரை: மதுரை அருகே 6-ம், 7-ம் நூற்றாண்டு வரலாற்றுச் சான்றுகள் அதிகமுள்ள அரிய வகை பறவைகள் அதிகம் வசிக்ககூடிய பல்லுயிர் வளம் கொண்ட அரிட்டாப்பட்டி மலைக்குன்றுகள் கொண்ட பகுதிகள் 'பல்லுயிர்ப் பாரம்பரியத் தலம்’ ஆக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து 24 கிமீ., தொலைவில் அழகர்மலைக்கும், பெருமாள் மலைக்கும் இடையில் அழகிய மலைகள் சூழ் கிராமமான அரிட்டாப்பட்டி அமைந்துள்ளது. இங்குள்ள கண்மாய் நீர் நிறைந்தே காணப்படுகிறது. கடும் கோடையிலும் வற்றாத நீர்ச்சுனை இங்கு உள்ளது. ஏழு மலைக் குன்றுகள், பலவகை மரங்கள், செடிகள், கொடிகள், விலங்குகள், ஊர்வன, பறப்பன, இயற்கையோடு இணைந்து வசிக்கும் மக்கள் மற்றும் ஆண்டு முழுவதும் செழித்து நடக்கும் விவசாயம் என பசுமை போர்த்திய கிராமமாக அரிட்டாப்பட்டி திகழ்கிறது.

இங்குள்ள மலைக்குன்றுகளில் சமணர்கால குகைகள், சமணப்படுகை, மகாவீரர் புடைப்புச் சிற்பம் என்று இன்றளவும் பாரம்பர்யச் சின்னங்களாக கிராம மக்களால் பாதுகாக்கப்படுகிறது. அதனால், அரிட்டாபட்டி கிராமப்பகுதியை பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவிக்கும் அரசாணையை வெளியிட வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். இந்நிலையில் பல்லுயிர் வளம் கொண்ட அரிட்டாப்பட்டி, மீனாட்சிப்புரத்தை உள்ளடக்கிய மலைக்குன்றுகள் கொண்ட 193.215 ஹெக்டேர் பகுதியை பல்லுயிர் பாரம்பரிய உயிர்ப்பன்மையம் வாய்ந்த பகுதியாக பகுதியாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரிட்டாப்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கூறுகையில், ''மதுரை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டிற்கு முன் ரியல் எஸ்டேட்டும், கிரானைட் தொழிலும் கொடிக்கட்டி பறந்தபோது அரிட்டாப்பட்டி மலைக்குன்றுகள் மீதும் அவர்கள் பார்வைப்பட்டது. இந்த மலைக்குன்றுகளை குடைந்து கிராணைட் தொழில் பார்க்க, கிரானைட் முதலாளிகள் அரசிடம் அனுமதி கேட்டிருந்தனர். அதை அறிந்த எங்கள் கிராம மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் துணையுடன், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, கிரானைட் குவாரியாக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்தினர்.

ஆனாலும், அடுத்தடுத்த தலைமுறைகளில் அரிட்டாப்பட்டிக்கு ஆபத்து நேரிடால் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், வரலாற்று ஆர்வலர்களும் அரிட்டாப்பட்டியில் உள்ள வரலாற்று சின்னங்களையும், அரிய வகை பறவைகள், விலங்குகள், இயற்கை வளங்களை ஆவணப்படுத்தினோம். அதனால், அரிட்டாப்பட்டியின் பல்லுயிர் சூழலையும், அதன் வரலாற்று சிறப்புகளையும் அறிந்த தமிழக அரசு அரிட்டாப்பட்டியை பல்லுயிர் பாரம்பர்ய பாதுகாக்கப்பட்ட பகுதியாக தற்போது அறிவித்துள்ளது,'' என்றார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவீந்திரன் கூறுகையில், ''அரிட்டப்பட்டி 7 மலைக்குன்றுகளாக இருக்கும். ஒவ்வொரு குன்றுக்கும் ஒரு பெயர் இருக்கிறது. 6ம், 7ம் நூற்றாண்டை சேர்ந்த சமணப்பள்ளிகள் இங்குள்ள மலைக்குன்றுகளில் இருக்கிறது. அங்கு சமணத்துறவிகள் தங்கியிருந்து மருத்துவத்தில் இருந்து வாழ்வியல் ஒழுக்கம் வரை கற்றுக் கொடுத்து இருக்கின்றனர். அவர்கள் ஊருக்கு வெளியேதான் இருப்பார்கள். மக்கள் அவர்களிடம் வந்து கற்றுக் கொள்ளும் நடைமுறை இருந்திருக்கிறது.

இதற்கான ஆதாரமான சமண படுக்கைள், கல்வெட்டுகள் உள்ளன. உருவ சிலைகளும் உள்ளன. புடைப்பு சிற்பங்கள் உள்ளன. பாறையை குடைந்து பாண்டியர் வடிவமைத்த சிவன்கோயில், சமணர் படுக்கைகள் உள்ளன. 2015ம் ஆண்டு முதல் அரிட்டாப்பட்டியில் பல்வேறு ஆய்வுகள் வரலாற்று ஆர்வலர்களாலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களாகலும் நடத்தப்பட்டது. அதில், லகடு வல்லூறு என்ற அரிதாகிப்போன பறவை கண்டறிய்பட்டது. இந்த பறவை ராஜஸ்தானிலும் தமிழகத்தில் அரிட்டாபட்டியிலும் மட்டுமே அரிதாக காணப்படுகிறது.

அதன் பிறகு ஒவ்வொரு பறவையாக அடையாளம் கண்டு இதுவரை 161 பறவையினங்கள் இங்கு வசிப்பதாக பதிவிடப்பட்டுள்ளன. கழுகு இனங்களில் இந்திய பொறி வல்லூறு, சிற்றழல், ராஜாளி, பெரும் புள்ளி கழுகு, கருங்கழுகு, கொம்பன் ஆந்தை, பூமன் ஆந்தை, நீல பூங்குருவி, சருகு திருப்பி போன்ற பறவைகள் குறிப்பிடத்தக்கவை. மேலும், 46 வகை வண்ணத்துப்பூச்சிகள், புள்ளி மான்கள், கடமான், நரி, காட்டுப்பன்றிகள், உடும்பு, பல பாம்பினங்கள், எண்ணவற்ற வண்டினங்கள், இரு வாழ்விகள் கண்டறியப்பட்டுள்ளன'' என்றார். | வாசிக்க > தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமானது மதுரை அரிட்டாபட்டி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x