Published : 16 Nov 2022 09:00 AM
Last Updated : 16 Nov 2022 09:00 AM

கோவை வனக்கோட்டத்தில் 170 வகை பட்டாம்பூச்சிகள், 228 வகை பறவைகள்: 2 நாள் கணக்கெடுப்பில் தகவல்

கோவை: கோவை வனக்கோட்டத்தில் வனத்துறையுடன், தன்னார்வலர்கள் இணைந்து இரண்டு நாட்கள் நடத்திய கணக்கெடுப்பில் 170 வகை பட்டாம்பூச்சிகள், 228 வகை பறவைகள் தென்பட்டுள்ளன.

கோவை வனக்கோட்டத்தில் உள்ள கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் ஆகிய 7 வனச்சரகங்களில் உள்ள பல்வேறு வகையான பறவைகள், பட்டாம்பூச்சிகளை அறிந்துகொள்ள மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமாரின் அறிவுறுத்தலின்படி, இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு (டிஎன்பிஎஸ்), கோயம்புத்தூர் நேச்சர் சொசைட்டி (சிஎன்எஸ்), டபிள்யு.டபிள்யு.எஃப் இந்தியா ஆகிய அமைப்புகள் இணைந்து கடந்த 12,13-ம் தேதிகளில் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டன.

உதவி வனப்பாதுகாவலர்கள் சி.தினேஷ்குமார், எம்.செந்தில்குமார், வனச்சரகர்கள் மேற்பார்வையில் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. கணக்கெடுப்பில் மொத்தம் 82 தன்னார்வலர்கள், வனப்பணியாளர்கள் அடங்கிய 16 குழுக்கள் ஈடுபட்டன. இதில், மொத்தம் 170 வகை பட்டாம்பூச்சிகள், 228 வகை பறவைகள் தென்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார் கூறும்போது, “தொடர்ந்து 4-வது ஆண்டாக நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணியின்மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பல்லுயிர் பரவல் தெரியவந்துள்ளது. இதுபோன்ற கணக்கெடுப்பு பணியின் மூலம் கிடைக்கும் தகவல்கள் குறிப்பிட்ட வகை உயிரினங்களை காப்பதற்கான திட்டமிலுக்கு உதவிகரமாக இருக்கும்” என்றார்.

டிஎன்பிஎஸ் தலைவர் அ.பாவேந்தன், டபிள்யு.டபிள்யு.எஃப் ஒருங்கிணைப்பாளர் பூமிநாதன், சிஎன்எஸ் அமைப்பைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் ஜி.பிரகாஷ் ஆகியோர் கூறும்போது, “கணக்கெடுப்பின்போது செவ்வலகு செண்பகம் பறவையை 2-3 குழுவினர் பார்த்துள்ளனர். இது இங்கேயே இருக்கும் பறவை என்றாலும், அதனை பார்ப்பது அரிது. மேலும், வலசை வரும் பறவைகளான ஐரோப்பிய பஞ்சுருட்டான், ஆறுமணி குருவி ஆகியவையும் தென்பட்டன.

இதில், ஆறு மணி குருவியானது இமயமலை அடிவாரத்தில் இனப்பெருக்கம் செய்கிறது. அங்கு குளிர்காலங்களில் பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் இரை கிடைப்பது கடினம். எனவே, உணவுக்காக இடம்பெயர்ந்து இங்கு வருகிறது. கோடை காலம் தொடங்கியவுடன் மீண்டும் அங்கேயே சென்றுவிடும். இது தவிர, கோவையில் அரிதாக காணப்படும் மலபார் இருவாச்சி பறவை காரமடை வனச்சரகத்திலும், பழுப்பு காட்டு ஆந்தை போளுவாம்பட்டி வனச்சரகத்திலும் தென்பட்டுள்ளது.

இதில், பழுப்பு காட்டு ஆந்தையானது உருமறை தோற்றம் கொண்ட பறவை என்பதால், பகலில் அது மரத்தில் அமர்ந்திருந்தாலும் எளிதில் நம் கண்ணுக்கு தெரியாது. இதுதவிர, அரிதாக தென்படும் கருங்காடை, பெருங்கண்ணி உள்ளிட்ட பறவைகளும் தென்பட்டன.

பட்டாம்பூச்சிகளை பொருத்தவரை கோவை வனக்கோட்டத்தில் முதல்முறையாக ‘மேகுலேட் லேன்ஸர்’ வகை பட்டாம்பூச்சி போளுவாம்பட்டி வனச்சரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, கணக்கெடுப்பின்போது தென்பட்ட பட்டாம்பூச்சிகளில் ஸ்ரியேடட் ஃபைவ் ரிங், பெயின்டட் கோர்டிசன், பிலிப்பைன்ஸ் ஸ்விப்ட், ஃபுளு அட்மிரல், இந்தியன் ரெட் அட்மிரல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x